இளையான்குடி: இளையான்குடி அருகே போக்குவரத்துக்கு பயனற்ற தார்ச்சாலையால், ஆறு கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இளையான்குடி-சிவகங்கை மெயின் சாலையிலிருந்து குன்டுகுளம், கொடிமங்கலம், நாகமுகுந்தன்குடி, இட்டிச்சேரி, முடவேலி, வழியாக தாயமங்கலம் பிரதான சாலை கடும் சேதமடைந்துள்ளது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கும், குன்டுகுளம், நாகமுகுந்தன்குடி ஆகிய இடங்களில் செயல்படும் பள்ளிகளுக்கும் சென்றுவர இந்த சாலையைத்தான் அப்பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2008ல் திமுக ஆட்சியில் போடப்பட்ட இந்த சாலையை, இதுவரை சீரமைக்கவோ, புதிய சாலை அமைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ள இந்த சாலையால், அவசர காலத்திற்கு ஆம்புலன்சும் வருவதில்லை, டூவீலரில் சென்றாலும் பஞ்சர், விபத்து ஏற்படுகிறது என, 6 கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.