ரிசர்வ் வங்கி புது குண்டு ரூபாய் நோட்டால் கொரோனா பரவ வாய்ப்பு: வணிகர் அமைப்பின் கேள்விக்கு விளக்கம்

புதுடெல்லி: ரூபாய் நோட்டு மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என, வணிகர் அமைப்பு எழுப்பிய சந்தேகத்துக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியபோதே, ரூபாய் நோட்டால் கொரோனா பரவுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், ரூபாய் நோட்டு மூலம் கொரோனா பரவும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கடந்த மார்ச் 9ம் தேதி கடிதம் அனுப்பியது. அதில், ‘ரூபாய் நோட்டு மூலம் கொரோனா போன்ற வைரஸ், பாக்டீரியாக்கள் பரவுமா?’ என கேள்வி எழுப்பியிருந்தது. இந்தக் கடிதத்தை, ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் அனுப்பியுள்ளது.

அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், கொரோனா வைரஸ் உட்பட வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை ரூபாய் நோட்டுகள் தாங்கிச்செல்ல வாய்ப்புகள் உள்ளன’ என ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பி.சி.பார்தியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் கூறுகையில், ‘‘ரூபாய் நோட்டு மூலம் வைரஸ் பரவுமா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ரூபாய் நோட்டு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை பரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

எனவே, ரூபாய் நோட்டு பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. இவற்றை கண்டிப்பாக தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில், அந்தச் செலவை வங்கிகளுக்கு மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும். காலப்போக்கில், இத்தகைய மானியங்கள் அரசுக்கு பெரும் சுமையாக இருக்காது. ஏனெனில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தால், ரூபாய் நோட்டு அச்சிடுவதற்கான செலவுகளும் குறைந்து விட வாய்ப்புகள் உள்ளன.  

ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, கடந்த 2018-19 நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு புழக்கம் 17 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, 10,875.9 கோடி நோட்டு புழக்கத்தில் இருந்தன. மதிப்பு அடிப்படையில் இந்த பணப்புழக்கம் 6.2 சதவீதம் உயர்ந்து ரூ.21,10,900 கோடியாக இருந்தது. மொத்த பணப்புழக்க மதிப்பில் ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டு கடந்த மார்ச் 2018ல் 80.2 சதவீதமாக இருந்தது; கடந்த ஆண்டு மார்ச்சில் இது 82.2 சதவீதமாக உயர்ந்து விட்டது என இந்தக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: