கோவில்பட்டி: ஓ.டி.டியில் திரைப்படம் வெளியீடு தற்காலிகமானது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில் கட்சி என்ன நிலைபாட்டை எடுக்கலாம், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடந்தது. யார் முதலமைச்சர் என்று கேள்வி அங்கு எழவில்லை. செயற்குழுவில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை தனது ட்விட்டர் பதிவில் துணைமுதல்வர் ஓபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவரை கட்சி நிர்வாகிகள் சென்று சந்திப்பது வழக்கமான ஒன்று தான்.