சென்னை: பத்துக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், கட்டுமான பகுதிகள், மார்க்கெட்டுகளில் கொரோனா விதிமீறல்களை கண்காணிக்க வார்டு வாரியாக 200 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பலர் விதிகளை கடைபிடிக்காமல் சுற்றி வருகின்றனர். இதையடுத்து கொரோனா தொடர்பான விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசு அவரச சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு ரூ.500, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.