புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் வேதனை!!

சென்னை : புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்று உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின் போது மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கின் முந்தைய விசாரணையின் போது, புலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் தரப்பில் நீதிபதிகளிடம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனிடையே வழக்கறிஞர் சூர்யபிரகாசம் குறுக்கிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் அசாமை சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை சுட்டிக் காட்டினார். இதை கேட்ட நீதிபதிகள், இந்தியாவில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வேதனை தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது, இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை.புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் உரிய ஊதியமும் இல்லை. பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது. புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது. அசாம் மாநில பெண் திருப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். 

Related Stories: