நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மனு

டெல்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என, அறிவித்த நீதிமன்றம், மன்னிப்பு கேட்டால், அவரை விடுவிப்பதாக உத்தரவிட்டது.

பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதையடுத்து, அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். செப்., 15க்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால், மூன்று மாதம் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும் விதிக்கப்படும் என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், அபராத தொகையான 1 ரூபாயை, பிரசாந்த் பூஷன் செலுத்தினார்.

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்த் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரஷாந்த் பூஷன், அபராதத்தை செலுத்தி விட்டதால், எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை, நான் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கற்பிக்க கூடாது. இந்த வழக்கில் எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வேன். எதிர்ப்பு குரல்களை மவுனமாக்க, அரசு எல்லா வழிகளையும் பயன்படுத்துகிறது, என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: