11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. அதனால் கோபம் அடைந்த ஓபிஎஸ், பொதுக்குழுவில் அறிவித்தபடி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைத்த பிறகுதான் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். நேற்று 2வது நாளாக தனது ஆதரவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதேநேரத்தில் பாஜக மேலிடம் யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்பது தெரியாததால் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது.

 தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டது.

இருவரின் ஆதரவாளர்களும், போஸ்டர் யுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து கடந்த 18ம் தேதி சென்னை, ராயப்பேட்ையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும், கடந்த 28ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்து பிரச்னை எழுப்பட்டது. குறிப்பாக, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர். கடைசியாக நடந்த இரண்டு கட்சி கூட்டங்களிலும் தனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கருதினார். இதனால் கோபம் அடைந்த ஓபிஎஸ், நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அனைத்து மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

முதல்வர் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரம், தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோருடன் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவரை முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆகியோர் வந்து சந்தித்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் உதயகுமார் வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்ததும் அமைச்சர் உதயகுமார் முதல்வர் எடப்பாடியையும் சந்தித்தார். முன்னதாக நேற்று முன்தினம் மாலை முதல்வர் எடப்பாடியை அமைச்சர் வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினர். இப்படி இரண்டு பேரும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது அதிமுக தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போதும், முதலில் பொதுக்குழுவில் கூறியபடி வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும். அந்தக்குழுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும். இப்போது தேவையில்லாமல் ஏன் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

அதோடு, தங்கமணி, ேவலுமணி ஆகியோர் என்னிடம் இணைப்புக்காக பேசியபோது, இந்த ஒரு முறை நீங்கள் துணை முதல்வராகவும், எடப்பாடி முதல்வராகவும் இருக்க சம்மதியுங்கள். நீங்கள் ஒருங்கிணைப்பாளராகவும், அவர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார் என்று கூறினார்கள். இப்போது 2வது முறையாகவும் அதே நிலை தொடர வேண்டும் என்று இப்போது கூறுகின்றனர்.

நான் இப்போதும் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அதேநேரத்தில், கட்சியை நான் கவனித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் பதவியை எனக்கு கொடுங்கள். துணை முதல்வர் பதவி வேண்டாம்’’ என்றார். இந்த நிலைப்பாட்டில் தான் உறுதியாகவும், இறுதியாகவும் இருப்பதாக கூறினார். அதேநேரத்தில், அவரது வீட்டு முன் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள், ெஜயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ், வருங்கால முதல்வர் ஓபிஎஸ், நிரந்தர முதல்வர் ஓபிஎஸ், அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஓபிஎஸ்’என கோஷம் எழுப்பினர். நேற்று காலை சென்னை மாநகராட்சி சார்பில் தீவுத்திடலில் அரசு விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை.

அதேநேரம், அவரது துறையான வீட்டுவசதி துறை சார்பில் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதே நேரம் முதல்வர் எடப்பாடியுடன் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ் புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சமரசபடுத்தும் முயற்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மிகவும் மனஉளைச்சலில் உள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஆனால், 2017ம் ஆண்டு பொதுக்குழுவில் முடிவு எடுத்தபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதலில் அமைக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதமாக உள்ளார். வழிகாட்டு குழு அமைத்த பிறகே அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதில் இருந்து அவர் இறங்கி வர மறுக்கிறார். அவர் ராஜினாமா செய்வார் என்ற தகவல் உண்மை இல்லை. அதிமுக கட்சியிலும், துணை முதல்வர் பதவியிலும் அவர் தொடர்ந்து நீடிப்பார். அதே நேரம் தனக்குள்ள அதிகாரத்தை அவர் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், தற்போது மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

ஆனாலும், முதல்வர் வேட்பாளர் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதிமுக உள்கட்சி மோதல் முடிவுக்கு வந்து, வருகிற 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது” என்றார். மேலும் பாஜக மேலிடம் இரு அணியினரில் யாருக்கு ஆதரவு என்பதை தெளிவுபடுத்தவில்லை. அவர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவரது கைதான் ஓங்கும். ஆனால் இதுவரை பாஜக மேலிடம் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதனால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

அமைச்சர் உதயகுமார் கிண்டல்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால் நேற்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அமைச்சர் உதயகுமார் இரண்டு பேரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். இருவரிடமும் சமாதானம் செய்யவே அவர் முயற்சி செய்ததாக கூறப்பட்டது. ஆனால், நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, “ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடல் நிலை சரியில்லாததால் தான் முதல்வர் எடப்பாடி பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அவரது (ஓபிஎஸ்) உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் நானும் அவரது வீட்டுக்கு சென்றேன்” என்றார். 2017ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா முதல்வர் பதவிக்கு குறி வைத்தார். அப்போதும், அமைச்சர் உதயகுமார் தான் கட்சியும், ஆட்சியும் ஒருவரின் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். அதனால் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறி சசிகலாவுக்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் பேட்டி கொடுத்து பிரச்னையை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ் புறக்கணித்து வருகிறார்.

* ஓ.பன்னீர்செல்வத்தை சமரசப்படுத்தும் முயற்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: