மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு வைகோ கடிதம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23ம் தேதி ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல். தேசப்பன் ஆகிய 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கச்சென்றனர்.  ஜூலை 28ம் தேதி வரை தொடர்பில் இருந்தனர். ஆகஸ்ட் 7ம் தேதி அவர்கள் கரைக்குத் திரும்பி இருக்க வேண்டும்.  ஆனால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் வேதனைக்கு உள்ளாயினர். 53 நாட்கள் கழித்து செப்டம்பர் 13ம் தேதி அவர்கள் மியான்மர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தது.

அவர்களை கொரோனா காரணமாக  மியான்மர் கடற்படையினர் தங்கள் நாட்டில் தரை இறங்க விடவில்லை. படகிலேயே இருக்கும்படி கூறிவிட்டனர். எனவே அவர்கள் பல மாதங்களாக படகிலேயே இருக்கின்றனர். 53 நாட்களாக கடலில் தத்தளித்த போதிலும்  உயிருடன் மீண்டு வந்த மீனவர்களுள் ஒருவர்  கரையில்  இருந்த பொழுது காணாமல் போயிருக்கிறார். அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து இருக்கின்றனர். எனவே மேலும் தாமதம் இன்றி  மீனவர்கள் அனைவரையும்  சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: