கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே எருக்கூர் வடிகால் வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் பகுதியில் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் எருக்கூர் வடிகால் வாய்க்கால் குறுக்கே கதவணை அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கதவணை கடந்த இரண்டு வருடங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் மேலும் கீழும் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீர் வரும் போது அதனை தேக்கி வைக்கும் அளவிற்கு இந்த கதவணை மதகு இயங்காமல் உள்ளதால் குறைந்த அளவே வரும் தண்ணீரும் வீணாகவே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எருக்கூர் வடிகால் வாய்க்காலில் குறுக்கே அமைந்துள்ள பழுதடைந்துள்ள க தவணையை சரி செய்ய விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எருக்கூர் வடிகால் வாய்க்கால், அரசூர், மணலகரம், ஆர்ப்பாக்கம் ஆகிய கிராமங்கள் வழியாக சென்று மாதானம் அருகே புது மண்ணிஆற்றில் கலக்கிறது.