சென்னை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வரும் 27-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறினார். இதுதொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6,000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கு, திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.