காளையார்கோவில் : எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை. விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பவே அச்சமாக உள்ளது என, கொள்ளையர்களால் தாய், மனைவியை இழந்த ராணுவ வீரர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன். இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். ஜூலை 14ம் தேதி முடுக்கூரணி கிராமத்தில் வீட்டில் இருந்த இவரது தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா ஆகியோரை மர்மநபர்கள் கொலை செய்து 58 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க காளையார்கோவில் காவல்துறை சார்பில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்து 60 நாட்களை கடந்தும் இதுவரையில் குற்றவாளிகள் பிடிபடவில்லை.