கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு எதிரொலியால் உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகள் பட்டினி : ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கவலை!!!

நியூயார்க்:  கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டிருப்பதாக யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெபும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பும் இணைந்து 2020ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில், உலக அளவில் கல்வி, வீடு, சுகாதாரம், சத்துணவு, குடிநீர் போன்ற அடிப்படைகள் வசதிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 120 கோடியாக உயர்ந்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தொற்று மற்றும்  அதன் பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட பல்வேறுகட்ட ஊரடங்கு விதிமுறைகளும், கோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையின் ஆழத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்ரியட்டா வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று உலக அளவில்  கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் கூறியுள்ளது. குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம் அதிகரிக்கும் எனவும், இதனால் வறுமை சுழற்சியில் அவர்கள் சிக்குவார்கள் எனவும் யுனிசெப் எச்சரித்துள்ளது.

Related Stories: