கோத்தகிரியில் ஆபத்தை உணராமல் குப்பை வண்டியில் தூய்மை பணியாளர்கள் பயணம்

குன்னூர் : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் தினசரி தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலகமே பயந்து நடுங்கும் கொரோனா தொற்றிற்கு எதிராக, களம்காணும் ஊழியர்களை அரசு நிர்வாகங்கள் கூடுதல் பாதுகாப்புடன் நடத்தி வருகின்றது.

இதற்கு எதிர்மறையாக, கோத்தகிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, அன்றாடம் தூய்மைப் பணிக்கு குப்பை ஏற்றும் வாகனத்தில் கூட்டமாக ஏற்றிச்செல்லும் அவலம் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தூய்மை பணிகளை மேற்கொள்ள ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச்செல்ல முறையான வாகனங்களை ஏற்பாடு செய்யாமல் நாள்தோறும் நகராட்சி குப்பை வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர்.

வாகனத்தில் பணியாளர்களை கூட்டமாக ஏற்றிச்செல்வதால் இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து எந்தக் கவலையுமின்றி, பேரூராட்சி நிர்வாகம்  மெத்தனமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: