பிறந்தநாள் கேக் ஆர்டர் கொடுத்த பெண் வாடிக்கையாளர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு: பேக்கரி ஊழியர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு அர்ஜூனமேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவியை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், ஆபாசமாக பேசியுள்ளார். நீங்கள் யார் என விசாரித்தபோது, சமூக வலைதளத்திலிருந்து உங்கள் செல்போன் எண் கிடைத்ததாக கூறினார். இதுகுறித்து, அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்யும் வெங்கடேசன் (22) சமூக வலைதளத்தில் அவதூறு செய்தது தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞரின் மனைவி, பிறந்தநாள் கேக் ஆர்டர் கொடுக்க பேக்கரிக்கு சென்றபோது, கேக் டெலிவரி செய்வதற்காக அவரது செல்போன் எண்ணை வாங்கிய வெங்கடேசன், அந்த பெண்ணின் வாட்ஸ் அப்பில் வைத்திருந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதை அவரது செல்போன் எண்ணுடன், சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்டிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து செல்போன் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: