உத்திரமேரூர் அருகே 26 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டும் பணி தொடக்கம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுபினாயூர், பென்னலூர், தண்டரை ஆகிய கிராமங்களில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 26 பழங்குடியின குடும்பங்களுக்கு பசுமை வீட்டுக்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.முத்துக்குமார் கலந்து கொண்டு பசுமை வீட்டுக்கான பணி ஆணையினை வழங்கினார். முன்னதாக பழங்குடியின மக்கள் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

பின்னர் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு கட்டும் பணியினை துவக்கி வைத்தார். பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு தலா ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் விதம் 26 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 80 லட்சத்து 80 ஆயிரத்திற்கான பணி ஆணையினை வழங்கி பணியினை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், சினிவாசன் சாலவாக்கம் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன், எழிலரசு, ஊராட்சி செயலர்கள் அரிகோவிந்தன், இராஜி, நடனவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: