தர்மபுரி: தர்மபுரியில் பசியால் மயங்கிய மூதாட்டியை, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். ராஜகோபால் பூங்கா அருகே சென்றபோது, சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, பசியால் நடக்க முடியாமல் தடுமாறி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவர், அந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, குடிநீர் மற்றும் உணவு வாங்கிக் கொடுத்தார். விசாரித்ததில் அவர் தர்மபுரி வெளிப்பேட்டை தெருவைச் சேர்ந்த லட்சுமி (80) என்பதும், அவரது கணவர் 20 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டதும் தெரியவந்தது. அவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். சொத்து பிரச்னையில், மகன்கள் மற்றும் மகள்களால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு விட்டார்.