ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்காக 7 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட பல்ேவறு வண்ண மலர் செடிகள் அலங்காரப்படுத்தும் பணிகள் துவங்கியது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, முதுமலை, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டன. மே மாதம் நடைபெற இருந்த கோடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 5 மாதத்திற்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பூங்காக்கள் மட்டும் திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற பூங்காக்கள் மட்டும் 176 நாட்களுக்கு பிறகு கடந்த 9ம் தேதி முதல் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையில் உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் சுற்றுலா பாதிப்படைந்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் முறையில் டூரிசம் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதனை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்த்து வருகின்றனர்.