புதர் மண்டிக்கிடக்கும் வைகை அணை பூங்கா: பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை அணை பூங்கா இந்த மாத இறுதியில் திறக்க உள்ள நிலையில் பூங்காவை பராமரிக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் வலதுகரை பூங்கா மற்றும் இடதுகரை பூங்கா என 2  பூங்காக்கள் உள்ளன. இந்த வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்களும்,சிறுவர்கள் விளையாடுவதற்க்கு வசதிகளும்  உள்ளது. இதனால் பூங்காவிற்க்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாமல், வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.இந்நிலையில் கொரோ னா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டது. இதில் வைகை அணை பூங்காவும்  மூடப்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக வைகை அணை பூங்கா மாறியது. பின்னர் ஊரடங்கில் அரசு பல்வேறு  தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றலாத்தளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகை அணை பூங்கா பகுதி இந்த மாத இறுதியில் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகை அணை பூங்கா மற்றும் பூங்காவில் உள்ள சிலைகளை பாராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்,`` வைகை அணை பூங்கா இந்தமாத இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூங்கா  கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் புற்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. மேலும் மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து குப்பையாக காட்சியளிக்கிறது. இதனால் வைகை அணை பூங்காவை பொதுப்பணித்துறை அதிகாரிகள்  விரைந்து பராமரிக்க வேண்டும்’’ என்று கூறினர்.

Related Stories: