கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசியும் வயல் பகுதியில் வசிக்கும் தையல் தொழிலாளி குஞ்சாபா. இவர் கொரோனா ஊரடங்கு தொழில் பாதிப்பு காரணமாக தொழிலை மாற்றி முக கவசம் தயாரிக்க தொடங்கினார். தற்போது பாதுகாப்பான குறைந்த செலவில் சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் முக கவசம் தயாரித்து ரூ.30க்கு விற்பனை செய்து வருகிறார். பருத்தி துணிகளை வாங்கி அதில் இரு அடுக்கு பாதுகாப்புடன் இந்த முக கவசத்தை தயார் செய்துள்ளார். சாதாரண முக கவசங்கள் மூக்கு, வாய், தாடை பகுதியை முழுமையாக மூடி நிற்பது இல்லை. ஆனால் இவர் தயாரித்துள்ள முக கவசம் மூக்கு பகுதியில் வசதியாக தாங்கி நிற்கும் வகையில் உள்ளது. இதனால் மூக்கில் இருந்து கீழே இழுத்துக் கொண்டு தொங்குவது இல்லை. அதேபோல் கன்னம், தாடை பகுதி முழுவதுமாக பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை சலவை செய்து மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம்.