மதுரை:சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு ஒரு கொலை வழக்கில் சிவகங்கை நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கவனக்குறைவாகவும், விருப்பம் போலவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார். உலகளவில் பெயர் பெற்ற தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படக்கூடாது. ஆனால், தற்போது விசாரணையின் தரம் குறைந்துள்ளது. குற்றவாளிகள் விடுதலையாவது அதிகரித்துள்ளது. எனவே, இந்த வழக்கில், உள்துறை செயலர் மற்றும் டிஜிபி ஆகியோரை எதிர்மனுதாரர்களாக இந்த நீதிமன்றம் சேர்க்கிறது.