சிவகங்கை மாவட்டம் கீழடியில் 'கெண்டி மூக்கு பானை'கண்டெடுப்பு!: தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம்!!!

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வின்போது கெண்டி மூக்கு பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதாவது, கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அகரத்தில் சுமார் 12 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணியானது நடைபெற்று வருகிறது. அதில் தற்போது ஒரு குழியிலிருந்து கெண்டி மூக்கு பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே இந்த பகுதியிலிருந்து 5 அடுக்கு உறை கிணறு, தங்க நாணயங்கள், நீள வடிவ பாசிகள், பலவகை பானைகள் மற்றும் ஓடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த வகை பானையானது முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தோண்ட தோண்ட அகரத்தில் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் பெருமையுடன் கூறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள பானையானது பழங்காலத்தில் வாழந்த பண்டைய செல்வந்தர்கள் தண்ணீர் அருந்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: