கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 2.70 கோடி ரூபாய் முறைகேடு நடைந்திருப்பது சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும், பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், தமிழகத்தில், விவசாயிகள் அல்லாத போலி பயனர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு  குறித்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தல் உள்ள உறுப்பினர்கள் குறித்து ஆய்வு செய்யவும், ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை உடனே தெரிவிக்கவும் உத்தரவிட்ட நிலையில், முறைகேடாக சேர்ந்து இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயி அல்லாதோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.

முதல் கட்டமாக, பிரதமரின் விவசாய திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட சுமார் 37 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. முறைகேடாக கடன் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருப்பி வசூலிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பதால், இது தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது கணடுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,792 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,976 விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

Related Stories: