கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும், பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், தமிழகத்தில், விவசாயிகள் அல்லாத போலி பயனர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தல் உள்ள உறுப்பினர்கள் குறித்து ஆய்வு செய்யவும், ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை உடனே தெரிவிக்கவும் உத்தரவிட்ட நிலையில், முறைகேடாக சேர்ந்து இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயி அல்லாதோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.