புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 90 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் நோயாளிகள் எண்ணிக்கையை எட்ட பல நாட்கள் ஆன நிலையில், தற்போது ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பை எட்டி வருகிறது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கடந்த 24 மணி நேரத்தில் 1,065 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது.