பாலினம் மாறினாலும் பாசம் மாறாது?திருநங்கையை காதலித்து கரம்பிடித்த மாமன் மகன்: காரியாபட்டி அருகே ‘டும்... டும்...’

காரியாபட்டி: காரியாபட்டி அருகே உறவினரான திருநங்கையை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் வலையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு  திருநங்கையாக மாறி, தனது பெயரை ஹரினா (24) என மாற்றிக் கொண்டார். அதே கிராமத்தை சேர்ந்த ஹரினாவின் தாய்மாமன் கருப்பசாமி (27).  டிரைவரான இவர் ஹரினாவை காதலித்து வந்துள்ளார்.அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தனது பெற்றோரிடம் கருப்பசாமி கூறியுள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், பின்னர்  திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு காரியாபட்டி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கருப்பசாமி - ஹரினாவுக்கு நேற்று திருமணம்  நடைபெற்றது. இந்த திருமணத்தை திருநங்கைகள் நடத்தி வைத்தனர்.மணமகன் கருப்பசாமி கூறுகையில், “நாங்கள் இருவரும் ஓராண்டாக காதலித்தோம். திருமணத்துக்கு எனது பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவர்களை சமாதானப்படுத்தி, அவர்கள் சம்மதத்துடன் ஹரினாவை திருமணம் செய்து கொண்டேன்” என்றார்.

Related Stories: