சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்! - காதலி ரியா, உதவியாளர் வீடுகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை!!!

மும்பை:   நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் திடீர்ரென அதிரடி சோதனை நடத்தினர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகரின் மரணம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருஸ் டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் இறந்த நாட்களிலிருந்தே அவரது காதலி ரியா மீது பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

 இதனையடுத்து சுஷாந்தின் தந்தை பீகார் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் அந்த வழக்கு சிபிஐக்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் ரியாவின் உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ரியா போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலும் சிக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து, 5 பேர் கொண்ட குழுவினர் ரியா, ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் உதவியாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோர் வீடுகளில் ஒரே நேரத்தில் போதைத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஷோவிக் சக்ரபோர்த்தி வீடுகளிலிருந்து போலீசாரால் டைரிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, ஷோவிக்கை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து சுஷாந்த்திற்கு போதைப்பொருள் கொடுத்து அடிமையாக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் போதைப்பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த அப்துல் பாஷித் பாரிக் என்பவரை நேற்று முன்தினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை ரியாவின் சகோதரருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் அப்துல் பாஷித் பாரிக் ஆகிய இருவரிடமும் போதைப்பொருள் தடுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: