தனது பெயரை பயன்படுத்தி நண்பர்கள் பண மோசடி ஐகோர்ட் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை: ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை

திருவொற்றியூர்: மறைமலைநகர் திருநாவுக்கரசு நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் மேட்டு தெருவில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த இவர், தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அந்த அறையில் சோதனையிட்டபோது, ராஜேஷ்குமார் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில், தனது நண்பர்களான செங்கல்பட்டை சேர்ந்த செல்வதுரை மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் ஆகியோர் தனது பெயரை பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தனது வீட்டிற்கு வந்து தகராறு செய்கின்றனர். மேலும், ரவுடியை வைத்து மிரட்டி, என்னிடம் இருந்து வெள்ளை தாள்களில் கையெழுத்து வாங்கி கொண்டனர். இதனால், தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவிற்கு இவர்கள் இருவருமே காரணம், என எழுதியிருந்தது. இதையடுத்து வழக்கறிஞரை தற்கொலைக்கு துாண்டியதாக செங்கல்பட்டு பாலாறு நகரைச் சேர்ந்த செல்வதுரை (50) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காஞ்சிபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: