முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்: எதையும் சமாளிக்கும் தயார்நிலையில் ராணுவம்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் பாங்காக் சோ ஏரியின் தென்கரையில் சீனா ஆக. 29, 30ம் தேதி இரவு ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. இதைத் தொடர்ந்து, எல்லையில் இருநாடுகளும் படைகளை குவித்து வருவதால், அங்கு பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், ராணுவ தளபதி நரவானே இரண்டு நாள் பயணமாக நேற்று லடாக் சென்றுள்ளார். அங்கு அவர் படைகளின் தயார்நிலை குறித்து ஆய்வு நடத்தினார். அதேபோல், விமானப்படை தளபதி பதுவுரியாவும் கிழக்கு படைத்தளங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, தயார்நிலையை பற்றி ஆலோசித்தார்.

இதற்கிடையே, டெல்லியில் நடந்த அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ``இந்தியா தொடர்ந்து சீனாவின் அத்துமீறலை எதிர் கொண்டு வருகிறது. ஆனால், எந்த சூழலையும் எதிர்கொள்ள இந்திய படைகள் தயார்நிலையில் உள்ளன. அதே நேரம், இந்தியா-சீனா எல்லை பிரச்னையை சாதகமாக்கி கொண்டு பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்நிலையில் உள்ளது. ஒருவேளை இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் கூட நடத்தப்படக் கூடும். ஆனால், அதனையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருக்கின்றனர்,’’ என்று கூறினார்.

* ரஷ்யா-இந்தியா ஒப்பந்தம்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு, இந்திய ராணுவத்துக்கு 7.7 லட்சம் அதிநவீன ஏகே-47 203 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கான உடன்பாட்டை அவர் செய்துள்ளார். இந்திய ராணுவத்தில் தற்போது பயன்படுத்தப்படும் ஏகே-47 ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக இவை வாங்கப்படுகின்றன. ரஷ்யாவிடம் இருந்து ஒரு லட்சம் ஏகே-47 203 துப்பாக்கிகள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும். மற்ற துப்பாக்கிகள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

Related Stories: