புதுடெல்லி: மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு குறையாமல் இருப்பது, எல்லையில் பதற்றம் ஆகியவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜிடிபி எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது, இதுவரை இல்லாத அளவுக்கு மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோர் விமர்சித்திருந்தனர்.