துரைப்பாக்கம்: விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). ஆட்டோ டிரைவர். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ரஞ்சிதா, கவிதா, சினேகா என்ற மகள்களும் உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் முல்லா (எ) சிவகுமார் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர், நேற்று முன்தினம் ராஜேந்திரன் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்றனர். அதற்குள் சிவகுமார் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.இதனால், ராஜேந்திரனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இவர் மீது எந்த வழக்கும் இல்லாததால் பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.