புதுடெல்லி: என் குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக உள்ள சுரேஷ் ரெய்னா, சமீபத்தில் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறினார். இது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரெய்னாவின் உறவினர் கொலை செய்யப்பட்டதே அவர் நாடு திரும்பியதற்கு காரணம் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும் மற்றொரு புறம் தோனி மற்றும் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே அவர் வெளியேறினார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து ரெய்னாவின் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தனது குடும்பத்திற்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்து சுரேஷ் ரெய்னா முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.