அடுத்த 2 நாட்களுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக  பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுவை, காரைக்கால் உள்பட பெரும்பாலான  இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 13 செ.மீ மழையும், வேடசந்தூர், புகையிலை தோட்ட அலுவலகம் வேடசந்தூர் பகுதிகளில் தலா 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், காங்கேயத்தில் 10 செ.மீ, ஆண்டிப்பட்டியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், நாவலூரில் 8 செ.மீ, மேட்டுப்பட்டி, பலவிடுதி, திருப்பூர் தெற்கு, சேத்தமங்கலம் பகுதிகளில் தலா 7 செ.மீ, ஒகேனக்கல், பொன்னாகரம், கலசப்பாக்கம், வடபத்துப்பட்டு பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* செப்டம்பர் 1ம்(இன்று) தேதி,  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 2ம் தேதி, குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில், கேரள கடலோர மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 1 முதல் 5ம் தேதி வரை, தென் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 02.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 3.0 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: