கள்ளச்சாராயம் கடத்தியவர்களை விரட்டி பிடிக்க சென்றபோது வெடிச்சத்தம் கேட்டு துப்பாக்கியால் சுடுவதாக பதுங்கிய போலீசார்: துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தது அம்பலம்

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் கள்ளச்சாராய கும்பல் தாக்கியதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அந்த கும்பலை பிடிக்க போலீசார் மலையை சுற்றி முகாமிட்டு தேடி வருகின்றனர். அதன்படி ஊசூரிலிருந்து அல்லேரி மலைக்கு செல்லும் பாதையில் அந்த கும்பல் உள்ளதா என நேற்று போலீசார் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் கள்ளச்சாராயம் கடத்தி சென்றவர்களை பார்த்ததும் போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். சிவநாதபுரம் தாண்டி சென்ற அந்த நபர்கள் முடிந்தால் பிடியுங்கள் பார்ப்போம் என கூறியபடி சாராய மூட்டைகளுடன் தப்பி ஓடினர்.

அவர்களை விரட்டி பிடிப்பதற்காக சென்ற போலீசார், திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே  மறைவான பகுதியில் பதுங்கி இருந்து விட்டு வெளியேறினர். பின்னர் கள்ளச்சாராய ஆசாமிகள் துப்பாக்கியால் சுட முயன்று தப்பித்ததாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வேலூரிலிருந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போதும் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. விசாரணையில் இறந்த ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு வெடிக்கப்பட்ட ராக்கெட் பட்டாசு வெடித்த சத்தம் தான் அது என தெரிய வந்தது.

Related Stories: