நாமக்கல்: நாமக்கல்லில் பயோடீசல் என்ற பெயரில், கலப்பட டீசலை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு நேரங்களில் பயோ டீசல் என்ற பெயரில் ஆந்திர மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் கலப்பட டீசல், வாகனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகள், கலெக்டர் மெகராஜிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவுபடி, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள், நேற்று இரவு நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைபாசில் இருந்து சற்று தொலைவில் மறைவான இடத்தில், டேங்கர் லாரியில் இருந்து வாகனங்களுக்கு ஒரு கும்பல் டீசல் நிரப்புவதை கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு அலுவலர்கள் சென்றனர். இதை பார்த்த 3 பேர், வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.