தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை பெரியார் ஆற்றின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். முல்லை பெரியார் அணையிலிருந்து தேக்கடி வழியாக வரும் தண்ணீர் இந்த ஆற்றில், கம்பம் அருகே சுருளிப்பட்டி மனப்படுகையில் உடைப்பு ஏற்படும் அளவிற்கு கரை மிகுந்த சேதமடைந்துள்ளது. இதற்கிடையில் தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுவதால், நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பெருக்கெடுத்தோடும் தண்ணீரால் சுருளிப்பட்டி மனப்படுகையில் ஆற்றின் கரை விரைவில் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரை உடையும் பட்சத்தில், பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விளைநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படுமென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.