நாகை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பெருவிழாவிற்கு பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் 21 இடங்களில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருவதை கண்காணித்து வருகின்றனர்.வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கின்றனர். இதையும் தாண்டி பொதுமக்கள், பக்தர்கள் பேராலயம் வந்துவிடாமல் இருக்க பேராலயத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேராலயத்திற்கு வரும் பாதைகளான மாத்தாங்காடு, கறிக்கடை முச்சந்தி, பேராலயம் நுழைவு வாயில், உத்திரியை மாதாகோயில் தெரு, அண்ணாபிள்ளை தெரு உள்ளிட்ட 7 இடங்களில் இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்துள்ளனர்.