தஞ்சை: தஞ்சையில் கல்லணை கால்வாயில் அடித்துவரப்படும் குப்பைகளை தனியாக பிரித்து, எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்காக கால்வாயின் குறுக்கே பிரம்மாண்ட வலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாய பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும்போது அடித்துவரப்படும் குப்பைகள் கிளை வாய்க்கால்களில் சிக்கிக்கொள்வதால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு சிலர் நீரில் மூழ்கி உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே குப்பைகளை பிரித்து எளிமையான முறையில் சுத்தம் செய்யவும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், கால்வாயின் குறுக்கே சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மிதவையுடன் கூடிய பிரம்மாண்ட அலுமினிய வலை அமைக்கப்பட்டுள்ளது.