விருதுநகர்: தாதம்பட்டி கண்மாய்க்கு செல்லும் மழைநீரை தனிநபர் மறித்ததை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விருதுநகர் அருகே மீசலூர் காட்டுப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடை வழியாக தாதம்பட்டி கண்மாய்க்கு செல்கிறது. ஓடையில் மண்ணை கொட்டி தனிநபர் மறித்துள்ளார். மழைக்காலத்தில் வரும் தண்ணீரை தனிநபர் ஒருவர் தனது நிலத்தில் உள்ள பண்ணைக் குட்டைக்கு கொண்டு செல்லும் வகையில் மறித்துள்ளார். கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. மழை பெய்தால் தாதம்பட்டி கண்மாய்க்கு மழைநீர் செல்லாத சூழல் உருவாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால் தனிநபர் தனது நிலத்தில் அமைத்துள்ள ஒரு ஏக்கர் பரப்பளவிலான பண்ணை குட்டை இருமுறை நிறைந்துள்ளது.