சென்னை: பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் வீடியோ வெளியிட்ட நிலையில், கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதேபோல், கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சலால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வசந்தகுமார் எம்.பி. உடல்நிலையும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும், அவர் 5 நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார், என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அமைச்சர், சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டவுடன் சிகிச்சைக்கு வர வேண்டும். நோயாளிகள் தாமதமாக வருவது தான் மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது. மூச்சுத்திணறல், ஆக்சிஜன் அளவு குறைந்த பின் வந்தால் நோயாளிகளை காப்பாற்றுவதில் சிரமம், என தெரிவித்துள்ளார்.