வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் உடல் ஸ்கேன் செய்வதற்காக நெல்லை மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது!

நெல்லை:  தூத்துக்குடி மாவட்டம் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் உடலை, உடற்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பு ஸ்கேன் மற்றும் எஸ்ட்ரெ செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் உடல் இன்று உடற்கூறு ஆய்வு செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், திருநெல்வேலி ஐ.ஜி., மற்றும் 2 எஸ்.பிக்கள் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த காவலர் சுப்ரமணியனின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது காவலரின் உடலில் ஆங்காங்கே ஆணிகள் பாய்த்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவுடி வீசிய வெடிகுண்டில் ஆணிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் காவலர் சுப்ரமணியனின் உடலில் ஆணிகள் அதிகளவு பாய்ந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவலரின் உடலை முழு பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பாக ஸ்கேன் மற்றும் எஸ்ட்ரெ செய்யவேண்டுமென காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் காவலரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கான மருத்துவ குழுவினர் வந்திருந்த நிலையில், பிணவறையில் இருந்த உடலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் உள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

தென் மண்டலத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது அதிநவீன தொழிநுட்பத்துடன் இந்த நாட்டு வெடிகுண்டு செய்யப்பட்டு காவலர் கொலை செய்யப்பட்டிருப்பது மற்ற காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: