இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கை விசாரித்து வரும் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கோவை:  இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கை விசாரிக்கும் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இதன் முடிவுகள்  வெளியான நிலையில், மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் வைத்துதான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக தியானேஸ்வரன், சிவகாமி சுந்தரி மற்றும் அமானிசாந்தி ஆகிய 3 பேரிடமும் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி ஆய்வாளர் சுமதி மற்றும் டி.எஸ்.பியின் வாகன ஓட்டுனர் சரவணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தொற்று பாதிக்கப்பட்ட இருவரையும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தொடர்ந்து 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவை மற்ற அதிகாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென அதிகாரிகளின் உறவினர்கள் தெரிவிக்கப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: