சென்னை: தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சியால் கேரளா மற்றும் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, தற்போது அது உள் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். இதையடுத்து, குமரிக் கடல் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதி, கேரளா கர்நாடக கடலோரப்பகுதி, ஆகியவற்றில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.