புதுடெல்லி: ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து நிலவும் மந்த நிலை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 24 சதவீத தற்காலிக ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பொருளாதார மந்த நிலை, தற்போது கொரோனா வைரஸ் என அடுத்தடுத்து ஏதேனும் ஒரு காரணத்தால் ஆட்டோமொபைல் துறைக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 24 சதவீத தற்காலிக ஊழியர்கள் வேலை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தற்காலிக ஊழியர்கள் அதிகம். மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இவர்கள் சுமார் 60 சதவீதம் உள்ளனர். விற்பனை சரிவால் ஊழியர்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பலரை நிறுவனங்கள் மீண்டும் வேலையில் சேர அழைக்கவில்லை. புதிதாக பணியமர்த்துவதும் குறைந்து விட்டது. கொரோனா ஊரடங்கால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. புலம் பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து விட்டனர்.
ஆட்டோமொபைல் துறை உடனடியாக மீள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால் வேலைக்கு ஆள் தேர்வு இப்போதைக்கு நிகழ வாய்ப்பே இல்லை என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.