கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்களை உடனே அகற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானலின் இதயம் போன்றது நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரி. இந்த ஏரி கொடைக்கானலுக்கு அழகினை சேர்ப்பதுடன் படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள்- பைக் ரைய்டிங், நடைபயிற்சி செய்வது என சுற்றுலா பயணிகளுக்கும் சுகமான மறக்க முடியாத அனுபவத்தை தரக்கூடியதாகும். மேலும் இந்த ஏரி நீர் கீழமலையான பெருமாள்மலை, பேத்துப்பாறை, அஞ்சுவீடு உள்ளிட்ட விவசாய பாசனத்திற்கு உதவுவதுடன், பழநி நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.5 கிமீ சுற்றளவு கொண்ட இந்த ஏரி தற்போது களைச்செடிகளால் பாழ்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவுக்கு பிறகு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் ஏரியின் கரையோரங்களில் காணப்பட்ட ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்கள் தற்போது ஏரி முழுவதும் ஆக்கிரமிக்க துவங்கி விட்டன. இதனை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் ஏரியின் அழகு முற்றிலும் கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.