கரூர்: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டது.வங்க கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த காற்று சூறாவளியை போல வீசத் தொடங்கியது. இந்த காற்றின் காரணமாக சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாமல் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு விட்டனர். பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.