தர்மபுரி: தர்மபுரி-சேலம் சாலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 800க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில், தற்போது கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதால், அரசு மருத்துவமனைக்குள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி விட்டு, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்துவிட்டு, முக கவசத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.