திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை அதிக வாகன போக்குவரத்து கொண்ட சாலை என்பதால், தடையில்லா துரிதமான வாகன போக்குவரத்து ஏற்படுத்தும் விதமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அதிக வேகத்தில் சென்று வருகின்றன. இச்சாலையில், திருவள்ளூர், ஈக்காடு உட்பட பல கிராமங்களில் வசிக்கும் சிலர் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். இவை கட்டுப்பாடின்றி நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதால் தற்போது பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் வந்து விடுகின்றன.