வாழப்பாடி அருகே தமிழக முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய டிரைவர் மர்மச்சாவு: கிணற்றில் சடலமாக மிதந்தார்

வாழப்பாடி:சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி அணைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(64). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், யுவராஜ், மணி, ரவி என்ற மகன்களும் உள்ளனர். இளமைப் பருவத்திலேயே தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் டிரைவராக பணிக்கு சேர்ந்த குமாரசாமி, 35 ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.   மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பலமுறை குமாரசாமி கார் ஓட்டி, அவர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்று சொந்த கிராமமான அணைமேட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை வசிஷ்ட நதி கரையோரத்தில், அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில், குமாரசாமி மாயமான கடந்த 29ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியது தெரிய வந்துள்ளது. எனவே, மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாராவது அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: