உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியானது. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டது. உத்திரமேரூர்
பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் இதுவரை சுமார்
65க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர்
சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையொட்டி, கொரோனா தெற்றால், பாதிக்கப்பட்டோர்
வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில், பேரூராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி
தெளித்து, துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், பேரூராட்சி ஊழியர்கள், கொரோனா
தொற்றால், பாதிக்கப்பட்டோரின் வீடுகளில் சுகாதாரத் துறையினருடன் சேர்ந்து
ஸ்டிக்கர் ஒட்டி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி சிகிச்சை அளித்து
வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி பேரூராட்சி ஊழியர்கள்
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் துப்புரவு பணியாளர்கள்
உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனா
உறுதியானவர்களை, காஞ்சிபுரம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும்
பேரூராட்சி அலுவலகம் முழுவதும் கருமி நாசினி தெளித்து, அலுவலகத்துக்கு
பூட்டு போடப்பட்டது.
பின்னர், அருகில் உள்ள பழைய பேரூராட்சி
அலுவலகத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி: வண்டலூர்
தாலுகாவுக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி சர்வேயருக்கு கடந்த சில நாட்களுக்கு
முன் காய்ச்சல் அதிகமாக இருந்தது. இதனால், அவருக்கு கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை,
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, வண்டலூர்
தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.* செங்கை மாவட்டத்தில் 14,197 ஆக உயர்வுசெங்கல்பட்டு
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 14,197 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 10,480 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 2,246 பேர் நோய்தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
அதில், நேற்று மட்டும் கொரோனா தொற்றால், 4பேர் இறந்தனர்.