தொடரும் ஊரடங்கால் வேலையிழப்பு, கடன் நெருக்கடி மாற்றுத்திறனாளி மகனை கொன்று தாயும் விஷம் குடித்து தற்கொலை: வறுமையின் கொடுமையால் போடியில் பரிதாபம்

போடி: தேனி மாவட்டம், போடி, சுப்புராஜ் நகர் புதுக்காலனியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (72), கூலித்தொழிலாளி. உடல்நலம் குன்றியதால் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டில் உள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி (60). மூத்த மகள் தமிழ்ச்செல்வி திருமணம் முடிந்து உள்ளூரிலும், இரண்டாவது மகன் அழகுராஜா திருமணமாகி கோவையிலும் உள்ளனர். மூன்றாவது மகன் ரெங்கராஜ் (38) இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, பெற்றோருடன் வசித்து வந்தார்.

நாகலட்சுமி கூலிவேலைக்கு சென்று கணவனையும், மாற்றுத்திறனாளி மகனையும் பராமரித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கூலி வேலை கிடைக்காமல் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று குடும்பத்தை கவனித்து வந்தார்.

போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கி சமாளித்து வந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியவில்லை. குடும்பமே வறுமையில் சிக்கித் தவித்தது. இதனால், மனமுடைந்த நாகலட்சுமி நேற்று முன்தினம் பிற்பகலில், வங்கிக்குச் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு, மகன் ரெங்கராஜை தூக்கிக் கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத பள்ளிக்கு சென்றார். அங்கு விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை தண்ணீரில் கலக்கி மகனுக்கு கொடுத்து, தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: