கந்தசஷ்டி, நபிகள் குறித்து அவதூறு பதிவு கருப்பர் கூட்டம் சுரேந்திர நடராஜன், எஸ்.ஜே.கோபாலுக்கு குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை: இந்து கடவுளான முருகன் மற்றும் கந்த சஷ்டி குறித்து கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் ஆபாச கருத்துக்களுடன் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து பாஜ மற்றும் இந்த மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நடராஜன் உட்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குண்டர் சட்டத்தின் கீழ் சுரேந்திர நடராஜனை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு பரிந்துரை செய்தனர்.

அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி நேற்று கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலின் தொகுப்பாளர் சுரேந்திர நடராஜனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதேபோல், நபிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவு செய்த வழக்கில் இந்து தமிழர் பேரவையின் நிர்வாகி சிவனடியார் மவுண்ட் கோபால் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி சிவனடியார் மவுண்ட் கோபாலை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories: